Monthly Archives: January 2022

பூசை, வேள்வி & தன்னாட்டம்

பூசை: இறைவனைப் போற்றும் பாடல்களைப் பாடிக் கொண்டும், அவரைப் பற்றிய பொருண்மொழிகளை ஓதிக்கொண்டும் பூ & இலைகளை உடையவர் மீது தூவுவார் பூசாரி.

வேள்வி: பொருண்மொழிகளை ஓதிக்கொண்டு, வேள்விக்குழியில் எரியும் நெருப்பிற்குள் அரசமர சுள்ளி முதலான பொருள்களை இடுவார் புங்கவர்.

மேற்கண்ட இரண்டு செயல்களும் ஒரு வகையில் ஒன்றுதாம். அதென்ன வகை? தன்னாட்டம்!

நமக்கு தோன்றும் எண்ணங்களை (பூக்கள் / அரசமர சுள்ளிகள்) நமது தன்மையுணர்விற்கு (மூலவர் / நெருப்பு / உள்ளபொருள்) காணிக்கையாக்கிக் கொண்டு, அவ்வுணர்வை விட்டு விலகாமல் இருப்பதே தன்னாட்டமாகும்.

நமது தன்மையுணர்வு என்றும் மாறாது & அசையாது. இவ்வகையில் கருவறையிலுள்ள உடையவருக்கு சமமாகிறது. அதுவே அனைத்திற்கும் ஒளி கொடுப்பது. அதிலிருந்தே அனைத்தும் தோன்றுகிறது. அதுவே அனைத்தையும் செரிக்கிறது. இவ்வகையில் வேள்விக்குழியில் எரியும் நெருப்பிற்கு சமமாகிறது.

🌷 பூக்கள் = சுள்ளிகள் = எண்ணங்கள்
🌷 உடையவர் = நெருப்பு = தன்மையுணர்வு
🌷 பூசாரி = புங்கவர் = நாம் (நமது தனித்துவம் / அகந்தை)

எவ்வாறு நமக்கு தோன்றும் எண்ணங்களை நமது தன்மையுணர்விற்கு காணிக்கையாக்குவது?

எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பின் தொடர்ந்து சென்று, நிறைவேற்ற எண்ணாமல், நமது தன்மையுணர்வை இறுகப்பற்றிக் கொண்டிருந்தோமென்றால் எழுந்த எண்ணங்கள் அடங்கிவிடும். இப்படி எண்ணங்கள் எழுந்து அடங்குவதை, உடையவர் மீது தூவப்படும் மலர்களுக்கு சமமாக அல்லது வேள்வித்தீயில் போடப்படும் சுள்ளிகளுக்கு சமமாக கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

பெருமாளின் திருவிறக்கங்கள் – மெய்யியல் அடிப்படையில்

மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது – செய்தி.

அவ்வளவுதான்! “நமது முன்னோர்கள் இதை என்றோ உணர்ந்திருந்தனர். இதனால்தான் பன்றியையும் மனிதனையும் இணைத்து பன்றிப்பெருமாளை உருவாக்கியிருந்தனர்.” என்ற வகையில் எழுதத் தொடங்கிவிட்டனர்!

பன்றியின் இதயத்திற்கும் பன்றிப் பெருமாளுக்கும் எந்த தொடர்புமில்லை. பெருமாளின் திருவிறக்கங்கள் யாவும் மெய்யறிவைப் பற்றியது:

🌷 மெய்யறிவு பெறுவதற்காக மாமுனிவர்கள் பயன்படுத்திய நுட்பங்கள்
🌷 அல்லது, அவர்கள் அறிவுருத்திய நுட்பங்கள்
🌷 அல்லது, பயணிக்கும் வழியில் அவர்களுக்கு கிடைத்த துய்ப்புகள்

இனி, திருவிறக்கங்களை மிகவும் சுருக்கமாக பார்க்கலாம்:

1. மீன் திருவிறக்கம்

உடலென்னும் கடலுக்குள் ஆழ்தல். அதாவது, தனக்குள் தேடுதல்.

2. ஆமைத் திருவிறக்கம் – புலனடக்கம்

புலன்களை அடக்கி, மூச்சுப் பயிற்சி செய்து கொண்டு (உட்செல்லும் உயிர்வளி – தேவன், வெளியேறும் கரியமிலம் – அசுரன்), மெய்யாசிரியரின் அறிவுரையை (மந்தார மலை) சிந்தித்துக் (கடைந்து) கொண்டிருந்தால் முதலில் நஞ்சில் (பல காலமாக, பல பிறவிகளாக நம்முள் சேர்ந்துள்ள பதிவுகள்) தொடங்கி, இறுதியில் “நாமே உள்ளபொருள்” என்ற மெய்யறிவில் (நப்பின்னை – இலக்குமி) முடியும்.

3. பன்றித் திருவிறக்கம்

மீன் திருவிறக்க கதையில் வரும் கடலை மண்ணாகவும், மீனை பன்றியாகவும் மாற்றிக்கொண்டு, உடன் மோப்ப ஆற்றலையும் சேர்த்துக்கொண்டால் பன்றித் திருவிறக்க கதை கிடைத்துவிடும்! ஏன் மோப்ப ஆற்றல்? இதற்கு பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதிலளிக்கிறார்: இருப்பு என்ற ஒன்றில்லாமல் இருக்கிறேன் என்ற உணர்வு தோன்றுமா?

ஆகையால், இருக்கிறேன் என்ற உணர்வைக் கொண்டு நமதிருப்பை மோப்பம் பிடிக்கவேண்டும்.

4. கோளரி (சிங்கம்) திருவிறக்கம்

இந்த கதைக்கு திருக்கடவூர் தலவரலாறுதான் அடிப்படை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் எளிதில் புரிந்துகொள்ளலாம். நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் (பிரகலாதன் வெளிபடுத்தும் குணங்கள்), நமது தன்மையுணர்வை விடாது இறுகப்பிடிக்கவேண்டும் (மார்க்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ சிவலிங்கத்தை இறுகப்பிடித்தது போன்று). ஒரு சமயத்தில், நமக்குள்ளிருந்து ஒரு தெளிவு பிறக்கும்^; உலக காட்சி விலகிவிடும்; நாம் யாரென்பது தெளிவாகிவிடும்.

^ (மார்க்கண்டேயர் கதையில், சிவபெருமான் சிவலிங்கத்திலிருந்து வெளிப்படுவார்; பிரகலாதன் கதையில், கோளரிப் பெருமாள் தூணிலிருந்து வெளிப்படுவார்)

5. குறளன் (வாமனர்) திருவிறக்கம் – மெய்யறிவாளரிடமிருந்து (இந்திரன்) வெளிப்படும் அறிவுரை (உபேந்திரன்).

பகவானிடமிருந்து வெளிப்பட்ட “நான் யார்?” என்பது மிகச்சிறந்த குறளனாகும். இந்த அறிவுரையை ஏற்க மனமெனும் அசுரகுரு தொடக்கத்தில் தடைபோடும். மனதை ஒதுக்கி, இவ்வறிவுரையை ஏற்றுக்கொண்டு, விடாது சிந்திக்கத் தொடங்கினால் நனவு, கனவு, தூக்கம் (குறளன் அளந்த 3 அடிகள்) என்று எல்லா நிலைகளையும் அந்த சிந்தனை நிறைத்துவிடும். இறுதியில், மீதமிருக்கும் நமது தனித்துவத்தையும் (நான் இன்னார்) விட்டுவிடுவோம் (மகாபலியின் தலை மீது குறள் பெருமாள் கால் வைத்தது).

6. பரசுராமர் திருவிறக்கம் – பற்றறுத்தல்

மற்ற திருவிறக்கங்கள் யாவும் அவற்றில் வரும் முகமை கதாபாத்திரங்களைக் கொண்டு பெயரிடப்பட்டிருக்கும். இந்த திருவிறக்கம் மட்டும் கதாநாயகர் கையில் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயரைக்கொண்டு தொடங்கும். ஏனெனில், பரசு குறிக்கும் பற்றறுத்தல் இறுதி நிலையான நிலைபேற்றை வழங்கவல்லதாகும்!

“கோட்டைக்குள் எத்தனை எதிரிகள் இருந்தாலென்ன? வெளியே வர வர, வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், கோட்டை நம் வசமாகும்.” என்று அருளியிருக்கிறார் பகவான். இந்த சொற்றொடரை உருவகப்படுத்தினால் நமக்கு கிடைப்பது பரசு (பற்றறுத்தல்) எனும் ஆயுதம் கொண்டு பல்லாயிரம் மன்னர்களை (எண்ணங்களை) கொன்று குவித்த ராமர் – பரசுராமர்.

எண்ணங்களை எவ்வாறு வெட்டிச் சாய்ப்பது? “ஒவ்வொரு எண்ணம் கிளம்பும் போதும் அதை பின்பற்றி செல்லாமல், ‘இந்த எண்ணம் யாருக்கு தோன்றியது?’ என்று கவனித்தால், மனம் மீண்டும் தனது பிறப்பிடத்திற்கு திரும்பிவிடும். எழுந்த எண்ணமும் கவனிப்பாரின்மையால் அடங்கிவிடும்.” என்பது பகவானது வாக்கு. அதாவது, எண்ணங்களை பற்றிக் கொள்ளாமலிருக்கவேண்டும்.

7. இராமர் திருவிறக்கம்

வரலாறும் மெய்யியலும் பின்னிப் பிணைந்துள்ள கதை. மெய்யியல் அடிப்படையில் இராவணன் என்பது ஐம்புலன்களையும், ஐங்கருவிகளையும் கொண்டியங்கும் நிலையற்ற மனமாகும் (மனதுடன் உடல் உலகக்காட்சிகளையும் இணைத்துக் கொள்ளலாம்). இந்த மனதை அழித்தால் நாம் இழந்த நமது குளுமையை (சீதை, Coolness) மீண்டும் பெறலாம்.

மனதை எவ்வாறு அழிப்பது? மனமென்றால் என்னவென்று ஆராய்ந்து, அதன் இயல்பை அறிந்துகொள்வதே அதை அழிப்பதாகும். மனமழிந்த பின் – மெய்யறிவு கிடைத்த பின் – நமக்கு கிடைப்பது குளுமை மட்டுமே. வேறெதுவும் புதிதாக கிடைத்துவிடாது. எதுவும் நம்மை விட்டகலாது. ஆனால், இப்போது எதுவும் நம்மை பாதிக்காது.

8 & 9. பலராமர் & கண்ணன் திருவிறக்கங்கள்

கண்ணபிரான் திருவிறக்கத்தை தனியாக அணுகமுடியும். ஆனால், பலராம திருவிறக்கத்தை தனியாக அணுகமுடியாது. பிரானோடு இணைத்துத்தான் பொருள் காணமுடியும்.

மீன், பன்றி & பலராம திருவிறக்கங்கள் ஒன்றுதாம். மீனில், கடலுக்குள் மீன் ஆழ்ந்து செல்லும். பன்றியில், மண்ணை பன்றி நோண்டும். பலராமரில், மண்ணை பலராமர் உழுவார் (பண்படுத்துவார்).

மீன் & பன்றி கதைகளில், அவைகளே மெய்யறிவைப் பெற்றுவரும் (மீன் – திருமறைகள், பன்றி – அன்னை பூமா). இங்கு, பலராமருக்கு பின்னர் கண்ணன் (மெய்யறிவு) தோன்றுவார்.

பகவான் போன்ற ஒரு சில மெய்யறிவாளர்களே, மெய்யறிவு பெற்றது முதல், உலகக் காட்சியினால் (மாயையால்) பாதிப்படையாமல் இருந்துவிடுகின்றனர். பலருக்கு பெரும் போராட்டம்தான்! இந்த போராட்டத்தையே பலராமரும் கண்ணபிரானும் இணைந்து கம்சனோடு (உலகக் காட்சியோடு) மோதி வீழ்த்தினர் என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

(கண்ணபிரானின் கதைக்குள் பல செய்திகளை பதிவு செய்துள்ளனர். இந்த ஒரு திருவிறக்கத்தை ஆழ்ந்து கற்றுணர்ந்தாலே போதுமானதாகும்.)

10. கல்கித் திருவிறக்கம்

இந்த திருவிறக்கத்தை இரு விதமாக அணுகலாம்: இனி தோன்றப்போகும் நுட்பம் மற்றும் விடா முயற்சி.

🌷 விடா முயற்சி

வெற்றிவாகை சூடி, கோலோச்சிக் கொண்டிருக்கும் எந்த கொடூரனும் அவ்வளவு எளிதில் தோல்வியடைய விரும்புவதில்லை. இவ்வாறே இவ்வளவு நாள் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மாயையும் எளிதில் விலகிச்சென்றுவிடாது. விலகவேண்டிய சமயம் வரும்போது இன்னும் பல மடங்கு பலங்கொண்டு நம்மை தாக்கும். முதலில், நாம் விரும்பியதை, மதிப்பதை தாக்கும். இறுதியில், நமக்கேற்றவாறு உலகை மாற்றிக்கொடுப்பதாகக் கூட மன்றாடும். எதற்கும் சலையாமல், தோன்றும் காட்சிகளை ஒதுக்கித் தள்ளி (கல்கிப் பெருமாளின் கையிலிருக்கும் வாள்), விடாமுயற்சியுடன் (வெண்குதிரை) நமது தன்மையுணர்வை பற்றிக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், வேறு வழியில்லாமல் மாயை மாயமாகும் (உலகக் காட்சிகள் நீங்கிவிடும்).

🌷 இனி தோன்றப்போகும் நுட்பம்

தில்லை கூத்தபிரானின் தூக்கிய இடது பாதம், திருவாலங்காடு இரத்தின சபாபதி பெருமானின் மேல் நோக்கிய இடதுகால், மூலவரை நோக்கியிருக்கும் சிவன்காளை மற்றும் பகவானின் “நான் யார்?” ஆகிய இவை யாவும் உணர்த்தும் தன்னாட்டம் என்ற எளிமையான, சிறப்பான & மேன்மையான நுட்பத்தை விட மேலானதொரு நுட்பம் இனி தோன்றுமா என்று தெரியவில்லை. அப்படி தோன்றி உலகம் செம்மையானால் நல்லதே!

“திரும்பி அகந்தனை தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாசலா!!”

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல், மாட்டுப் பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! ✨

திருவருணை திரு அண்ணாமலையார் திருக்கோயில் பிரதோஷ விடை

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

— குறள் #624, இடுக்கணழியாமை

இக்குறளில் விடாமுயற்சிக்கு அடையாளமாக காளையை காண்பிக்கிறார் முப்பால் முனிவர்.

எனில், நமது திருத்தலங்களில் மூலவரை நோக்கி அமர வைக்கப்பட்டிருக்கும் சிவன்காளை உணர்த்துவதென்ன?

வெளிப்புறமாகவே ஓட எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை நம் தன்மையுணர்வின் மீது திருப்பி (விடை இறைவனை நோக்கியிருத்தல்), விடாமுயற்சியுடன் அவ்வுணர்வை பிடித்துக் கொண்டிருக்கவேண்டும் (விடை இறைவனையே பார்த்துக்கொண்டிருத்தல்).

இவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது! இவ்வளவுதான் நம்மால் இயன்றதும்கூட!! இதன் பிறகு இறைவனின் பாடு. 🙏🏽

oOo

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்

— குறள் #1035, உழவு

இக்குறளில், ஓர் உழவன் எப்படியிருக்கவேண்டும் அல்லது எப்படியிருப்பார் என்று சுட்டிக்காட்டுகிறார் தெய்வப்புலவர்: யாரிடமும் ஒரு பொருளை இரந்து கேட்கமாட்டார். வந்து இரந்து கேட்போருக்கு இல்லையென்று சொல்லமாட்டார்.

அன்று எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் உழவர்கள்!! 😌

oOo

திருவள்ளுவர் திருநாள் 🌺🙏🏽🙇🏽‍♂️

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

— கல்லாடர், வள்ளுவமாலை

(நல்லவேளை, கல்லாடர் காலத்தில் சமய வேறுபாடுகள் உள்ளபொருளை அடிப்படையாக கொண்டிருந்தன. நாசகார, நயவஞ்சக தொற்றுகள் நுழைந்த பின்னர் பாடியிருந்தால்… 🤢)

(இணைப்பு படம்: 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி செருப்படி பெற்றவனின் படைப்பான பகுத்தறிவு உச்சம் பெறுமுன் பயன்பாட்டிலிருந்த திருவள்ளுவ நாயனாரின் ஓவியங்களுள் ஒன்று)

oOo

பழையதை போக்கி, என்றும் புதிதாய் உள்ள உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு, வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து, வேண்டுதல் வேண்டாமை இலான் திருவடி சேருவோம்! 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

சபரிமலையில் செலுத்தப்படும் நெய் தேங்காய் காணிக்கை – சிறு விளக்கம்

“சபரிமலை வரலாற்றில் முதன்முறையாக 18,000 நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டன” — செய்தி.

18 ஆயிரமென்ன, 18 கோடி நெய் தேங்காய்களை உடைத்தாலும் பொருள் புரியாமல் செய்வதால் பயனில்லை.

எவ்வாறு “விளக்கேற்றுதல் எனில் தன்னலமற்று வாழ்தல்” என்ற பொருள் புரியாமல் 108, 1008, 10008, 100008 என எத்தனை விளக்குகள் ஏற்றினாலும் பயனில்லையோ, அவ்வாறே பொருள் புரியாமல் நெய் தேங்காய்களை உடைப்பதுமாகும்.

🔸 தேங்காய் – நமது தலை
🔸 தேங்காய்க்குள் நிரப்பப்படும் நெய் – நமது மூளை – நமது சிந்தனை
🔸 தேங்காயை உடைத்து நெய்யால் மூலவரை முழுக்குவது – நமது ஆணவத்தை ஒழித்து, சிந்தனையை இறைவனது திருவடிக்கு உரித்தாக்குவது. அதாவது, சித்தத்தை சிவன்பால் வைப்பது. அல்லது, சித்தமெல்லாம் சிவமயமாக்குவது.

இதை ஒரு முறைதான் செய்யமுடியும். ஆணவமழிந்தால் தானாகவே சித்தம் சிவமயமாகிவிடும். 18,000 முறை எப்படிச் செய்யமுடியும்?

நெய் தேங்காய் சடங்கின் உட்பொருள் மறந்து போனதால் வந்த விளைவு இது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

அ. எது இலங்கை? ஆ. எது சிறந்த சித்தரிப்பு? கீதோபதேசமா? அன்னை அன்னபூரணியா?

ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல …

கோளறு பதிகத்தின் 8வது பாடலில் இந்த வரிகள் இடம் பெறுகின்றன.

இலங்கையை “ஏழு கடல்கள் சூழ்ந்த” என்று குறிப்பிடுகிறார் ஆளுடைய பிள்ளையார் 🌺🙏🏽🙇🏽‍♂️. ஆனால், இலங்கையை 3 கடல்கள்தானே சூழ்ந்துள்ளன! (நுட்பமாக கணக்கிட்டால், இரு கடல்கள்தாம் தேறும்) எனில், எதை இலங்கையென்று குறிப்பிடுகிறார்?

நீரோட்டத்திற்கு இடையேயான பகுதியும் இலங்கை எனப்படும்!

எனில், ஏழு கடல்கள் என்பன எவை? ஏழு தாதுக்கள்! ஏழு தாதுக்களால் ஆன நம் உடல்!!

எனில், கடலெனும் உடல் சூழ்ந்த இலங்கை எது? நாம்தான்!!

இந்த இலங்கையின் அரையன் (தலைவன்) யார்? ஐம்புலன்களையும் ஐங்கருவிகளையும் கொண்ட மனமெனும் இராவணன்! ^

இந்த மனமெனும் இராவணனாலும் தனக்கு எந்த இடரும் நேர்ந்திடாது என்கிறார் பெருமான். ஏனெனில், தான் நிலைபேற்றை அடைந்துவிட்டதால் (உளமே புகுந்த அதனால்).

ஆகையால், உடலெனும் ஆழ்கடலும் நல்லதே என்கிறார். நாம் உடலை சிறை என்கிறோம். ஆனால், நிலைபேற்றை அடைந்துவிட்டால் உடலும் நல்லதே என்கிறார் பெருமான்.

oOo

^ – மெய்யறிவில் நிலைபெறும்வரை மனம்தான் நமக்கு தலைவனாகும் (படம் #1: கீதோபதேசம்). நிலைபெற்ற பின், அது நமக்கு உணவு சமைத்துப் பரிமாறும் அன்னை அன்னபூரணியாகிவிடும் (படம் #2).

🌷 கீதோபதேசம்

நின்று கொண்டிருக்கும் திருமால் இருள் பொருந்திய குழப்பத்தை / மயக்கத்தைக் குறிக்கிறார். மால் எனும் சொல்லிற்கு குழப்பம் / மயக்கம் என்பது பொருள். மாலோனே – மயக்குபவனே. அதாவது, மாயை.

வைணவம் அன்னை வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். உடலல்லாத நம்மை உடலாக காணச் (மயக்க) செய்யும் ஆற்றலுக்கு அன்னை வழிபாட்டில் மாயை என்று பெயர். அங்கு பெண்ணானது இங்கு ஆணாகிவிட்டது.

திருமாலின் காலடியிலிருக்கும் அர்ஜுனன் இருளுக்கு எதிரான ஒளியைக் குறிக்கிறார். சுய ஒளி கொண்டது எது? அறிவுப் பொருளாகிய நாமே அது.

தற்போது நம்மை நாம் ஓர் உடலாக காண்கிறோம். காட்சி மாத்திரமேயான உலகை உண்மையென்று கருதுகிறோம். அசைவற்ற நாம் ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு செல்வதாக உணர்கிறோம். அசையும் உலகு அசைவற்று நிற்பதாக காண்கிறோம். இதற்கு மயக்கம் என்று பெயர். நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும் வரை இந்நிலை தொடரும். இந்நிலை தொடரும் வரை நம்மை இயக்குவது மாயையாகும். இதனாலேயே நம்மை இயக்கும் மாயையை நிற்பது போன்றும், இயங்குவதாகத் தோன்றும் நம்மை மாயையின் காலடியிலிருப்பது போன்றும் சித்தரித்திருக்கிறார்கள்.

🌷 அடுத்து, அன்னை அன்னபூரணி

ஒரு சமயத்தில், நாம் அழியும் உடலல்ல, அசைவு நமக்கில்லை, இயங்குவது நாமில்லை, காணப்படும் உலகம் காட்சி மாத்திரமே என்பதையெல்லாம் உணர்ந்துவிடுவோம். அதாவது, மெய்யறிவு பெற்று நிலைபெற்றுவிடுவோம். இதன் பிறகு மாயையால் (திருமாலால்) நம்மை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், எடுத்த பிறவி முடியும்வரை காட்சிகள் மட்டும் தொடரும். தோன்றும் காட்சிகளை கண்டுகளித்திருப்பதைத் தவிர வேறு பணி நமக்கில்லை. இதை சற்று மாற்றிச் சொல்லவேண்டுமானால்: தானாக சமைந்து வருவதை உண்டு களித்திருப்பதைத் தவிர வேறு பணி நமக்கில்லை!

இவ்வுடல் வழியாக நாம் காணவேண்டிய காட்சிகளை சமைத்துக் கொடுக்கும் மாயையே அன்னை அன்னபூரணி ஆகிறார். மெய்யறிவில் நிலைபெறுவதற்கு முன் மாயையால் இயக்கப்பட்ட நாம், இப்போது, அதே மாயையால் உணவு பரிமாறப்படுகிறோம்!! ☺️

மெய்யறிவு பெறுவதற்கு முன்புள்ள நிலைக்கு பொருந்திய கீதோபதேசம், மெய்யறிவு பெற்ற பின் பொருந்தவில்லை. மெய்யறிவு பெற்ற பின் பொருந்தும் அன்னை அன்னபூரணி, பெறுவதற்கு முன் பொருந்துவாரா? பார்ப்போம்.

மெய்யறிவு பெறுவதற்கு முன்பும் பின்பும் நம்மைப் பற்றிய அறிவு & தோன்றும் காட்சிகளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைத்தவிர வேறெதுவும் மாறிவிடாது. பெறுவதற்கு முன், அன்னையுடன் சேர்ந்து (காட்சிகளை உண்மையென்று நம்பி) நடனமாடிக் கொண்டிருப்போம் (படம் #4: அம்மையப்பரின் கூத்து). பெற்ற பின், தோன்றும் காட்சிகளை கண்டுகளித்துக் கொண்டிருப்போம். நம் நிலைதான் மாறுகிறதேயன்றி அன்னையின் நிலை மாறுவதில்லை. காட்சிகளை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கிறார். அதாவது, சமைத்து உணவு பரிமாறிக் கொண்டேயிருக்கிறார். அன்னபூரணியாகவே இருக்கிறார்.

இவ்வகையில், கீதோபதேச சித்திரத்தைவிட அன்னை உணவு பரிமாறும் (படம் #2) அல்லது உணவு பரிமாற தயாராக தனியாக அமர்ந்திருக்கும் (படம் #3) சித்திரமே சிறந்ததாகும்.

🌷 கீதோபதேச சித்திரம் மட்டுமல்ல. பின்வரும் வைணவ & அன்னை வழிபாட்டுச் சித்திரங்களும் மெய்யறிவு பெறுவதற்கு முன்னர் மட்டுமே பொருந்தும்:

🔸 கண்ணபிரான் குழலூதுவது போன்றும், ராதை மயக்கத்துடன் அவரை காண்பது போன்ற சித்திரங்கள் (பிரான் – இருள், ராதை – ஒளி)
🔸 கண்ணபிரான் குழலூதுவது போன்றும், பல வகை விலங்குகள் மயக்கத்துடன் அவரை சுற்றியிருப்பது போன்ற சித்திரங்கள் (பிரான் – இருள், விலங்குகள் – உயிர்கள் – ஒளி)
🔸 மொத்தத்தில் மஞ்சள் வேட்டி உடுத்தியுள்ள பெருமாளின் சித்திரங்கள் யாவும்! கருமையான பெருமாளின் மேலுடல் இருளைக் குறிக்கும். அவரது மஞ்சள் கீழாடை ஒளியைக் குறிக்கும். அதாவது, ஒளியைவிட இருள் மேலானது / உயிரைவிட உயிரற்றது மேலானது / அறிவைவிட அறிவற்றது மேலானது என்பது அச்சித்திரங்கள் உணர்த்தும் பொருளாகும்.
🔸 சிவபெருமானுக்கு அன்னை பிச்சையிடுவது போன்ற சித்திரங்கள். இவற்றிலும், அன்னை அரியணையில் அமர்ந்திருக்க, பெருமான் அவரிடம் வந்து பிச்சை பெறுவது போன்ற சித்திரம் என்றைக்குமே பொருந்தாது! கண்ணுக்கெட்டிய தூரம்வரை புவியின் மேற்பரப்பு வளையாமல் காட்சியளிப்பதால், புவியானது தட்டையானது என்று பரங்கியர்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்ததற்கு சமமாகும்.

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

மார்கழி – மூலம் – மறைமதி நன்னாள்: ஆஞ்சநேயர் பிறந்தநாள்!

மார்கழி – மூலம் – மறைமதி நன்னாள். மனதைக் குறிக்கும் ஆஞ்சநேயர் திருவுருவத்தை வைணவர்கள் உருவாக்கிய நாள் அல்லது உருவாக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிய நாள்.

ஆஞ்சநேயர் – அனுமான் – ஹனுமான் – ஹ (இறை/சிவம்) + னு (கருவி) + மான் (மனம்) = இறையை அடைய உதவும் கருவியே மனம்.

🔸 மனம் நிலையற்றது
🔸 ‎பலம் பொருந்தியது
🔸 ‎ஒரு நொடியில் பல இடங்களுக்கு சென்று வரக்கூடியது
🔸 இதன் மூலம் கிடைக்க பெறும் துய்ப்புகள் யாவும் இறுதியில் பிறவிப்பிணி நீக்கவல்லது
🔸சேவை மனப்பான்மையுடன் வாழ்வதே இக்கருவியை சிறந்த முறையில் பயன்படுத்துவதாகும்

இனி, சற்று விரிவாக பார்ப்போம்.

🌪‎ மனம் நிலையற்றது. காற்றைப் போல. எனவே, சதா தாவிக் கொண்டிருக்கும் குரங்கின் வடிவத்தைக் கொடுத்தார்கள் வைணவர்கள்.

💪 மனம் பலம் பொருந்தியது. மனதையடக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே, அனுமானை பலசாலியாக வடிவமைத்தனர்.

🍩 உடல் உறுதியாகவும், நலத்துடனும் இருந்தால் மட்டுமே மனமும் பலமுடனும் இருக்கும். இதையே திருமூலர் 🌺🙏🏽🙇🏽‍♂️ “உடம்பாற் அழியின் உயிராற் அழிவர்…” என்ற திருமந்திரப் பாடலில் உணர்த்துகிறார். இதை உணர்த்தவே அனுமானுக்கு வடைமாலை சாற்றுகிறார்கள். வடைமாலை செய்ய பயன்படும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலுக்கு அவ்வளவு நன்மைகள் தரக்கூடியது.

🌏 மனதால் ஒரு நொடியில் பூமியின் எப்பகுதிக்கும் சென்றுவரலாம். அனுமான் ஒரே தாவலில் இலங்கை சென்றது போல.

😍 “மனம் என்பது ஓர் அதிசய சக்தி”, என்று கூறுகிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதே போன்று மனதை அற்புதம், அழகு, விஷேசம், பிரமிப்பு என்றழைத்த அருளாளர்களும் உண்டு. மனம் கொடுமையானது என்று சொன்ன அருளாளர்களும் உண்டு. ஆனால், உலகம் செம்மையாக இயங்க வேண்டி, நம் முன்னோர்கள் முன்னதிற்கே முகமைத்துவம் கொடுத்தனர். இதனால் தான் சைவத்தில் மனதை (முருகர்) அழகு என்றனர். இதையொட்டி வைணவர்களும் அனுமானை அழகன் என்றனர்.

🔺 ஒரு நதியின் பயணத்தில் தோன்றும் இன்னல்கள் யாவும் அதன் பயனுக்கே – அதன் இறுதி இலக்கான கடலில் கலப்பதற்கே. இது போன்றதே உயிரிகளின் பிறவிப் பயணமும். எண்ணற்ற பிறவிகள். பிறவி தோறும் இன்னல்கள். இவை யாவும் உயிரியின் இறுதி இலக்கான நிலைபேற்றை அடைவதற்காகவே. பிறவிகள், இன்னல்கள் என அனைத்தும் ஒரு உயிரிக்கு மனதின் வழியாகவே துய்ப்பாகும். ஆக, மனம் (அனுமான்) கொண்டு வரும் யாவும் உயிரியின் பிறவிப்பிணியை போக்கி அவனை உயிர்ப்பிக்கும் (^) சஞ்சீவினி மருந்தாகும். இக்கருத்தையே அனுமான் சஞ்சீவினி மலையைக் தூக்கிக்கொண்டு பறந்து வருவது போன்ற ஓவியம் உணர்த்துகிறது.

(^ – பிறவியெடுத்தலை இறத்தல் என்றும், தன்னைத் தெளிவாக அறிதலே (மெய்யறிவு பெறுதலே) பிறத்தல் (விடுதலை பெறுதல்) என்றும் கூறுகிறார் பகவான்)

🐂 ஒரு மனிதன் இவ்வுலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சிவன்காளை வழியாக சைவம் உணர்த்துகிறது.

விளையும் பயிரை தலைவன் எடுத்துக்கொள்ள, உழைத்த காளைக்கு வைக்கோல் மட்டுமே உணவாகக் கிடைக்கிறது. வண்டியை இழுத்து, ஏற்றப்பட்ட சுமைகளை தலைவன் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சேர்த்து, அவன் பெரும்பயன் அடைந்தாலும் காளை பெறுவது என்னவோ வைக்கோலும் தண்ணீரும் தான். ஆக, தனது உழைப்பால் காளை பெரிதாக பயனடையவில்லை. உழைப்பால் மட்டுமல்ல; தனது கழிவுகளாலும் அது பயனடைவதில்லை. ஆனாலும், அது உழைப்பதை நிறுத்துவதில்லை. தலைவன் இட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறது. இது போன்றே மனிதனும் வாழவேண்டும்.

அனைத்தையும் உடையவர் இறைவன். அனைத்தையும் இயக்குவதும் அவரே. நமக்கு வந்து சேர்வதை செவ்வனே செய்து முடிப்பது மட்டுமே நமது கடமையாகும். இதையே அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று பாடினார். பகவானும், “எண்ணுரு (தோன்றும் எண்ணங்கள் அல்லது காணும் உருவங்கள்) யாவும் இறையுருவாம் என எண்ணி வழிபடலே (வாழ்தலே) ஈசனை (இறையை) நல்ல முறையில் வழிபடுதலாகும்” என்றார். “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதும், “வாழ்தலே வழிபடுதல்” என்பதும் இப்படிப்பட்ட சேவை மனப்பான்மையுடன் சிவன்காளையாக வாழ்வதையேக் குறிக்கிறது. இதே சேவை மனப்பான்மையைத் தான் திரு ராம-லட்சுமண-சீதா பிராட்டியாரின் முன் கூப்பிய கைகளுடன் தலைவணங்கும் அனுமான் உணர்த்துகிறார்.

அனுமான் பிள்ளையாருக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்டவர் என்பதை “பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது” என்ற சொலவடை வாயிலாக அறியலாம். அதாவது, தமிழர்களின் ஆதிசமயமான சைவத்தில் பிள்ளையார் வடிவமைக்கப்பட்டு, மிகவும் புகழ் பெற்றுவிட, அவருக்குப் போட்டியாகவும், அவரையும் சிவன்காளையையும் மிஞ்சும் வண்ணம் ஒரு வடிவத்தை உருவாக்க முயற்சி செய்து, இறுதியில் மனதைக் குறிக்கும் குரங்கு வடிவ அனுமானாய் முடிந்துவிட்டது. பிறகு, அறிவைக் குறிக்க கருடனை வடிவமைத்தார்கள்.

மனதைப் (அனுமானைப்) பற்றி எத்தனையோ நல்லவிதமாக சிந்தித்தாலும் ஒரு சமயத்தில் மனதை ஒதுக்கித் தள்ள வேண்டிவரும். தள்ளியும் விடுவோம். இல்லையெனில் மீண்டும் பிறவியெடுப்போம்.

ஒரு வேளை, “நான் ஏன் இன்னும் எனது மனதை ஒதுக்கித் தள்ளாமலிருக்கிறேன்?” என்று பகவானிடம் கேட்டால், பகவானின் பதில் பின்வருமாறு இருக்கும்:

“நீ பட்டது போதல. இன்னும் படவேண்டியிருக்கு.”

☺️

oOOo

மனதைப் பற்றி பகவான் அருளியவற்றில் சில…

🔸 மனம் என்று தனியாக ஒரு பொருளில்லை. எண்ணங்களின் தொகுப்பே மனம்.
🔸 ‎ “நான்” என்னும் எண்ணமே அனைத்திற்கும் முதலாகும். இது தோன்றிய பிறகே உடல், உலகு என அனைத்தும் தோன்றுகிறது.
🔸 வெளிமுகமாகச் சென்று கொண்டிருக்கும் நம் கவன ஆற்றலை, நம் மீதே திருப்பி, இந்த நான் என்பது என்ன என்று கவனித்தோமேயானால், மனம் ஓட்டம் பிடித்துவிடும்.
🔸 ‎ நல்ல மனம் என்றும், கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்கள் இல்லை. எண்ணங்களே இரண்டு விதம். நல்ல எண்ணங்களின் வயப்படும் போது நல்ல மனம் என்றும், தீய எண்ணங்களின் வயப்படும் போது கெட்ட மனம் என்றும் அழைக்கிறோம்.
🔸 ‎ மெய்யறிவு பெறுவதற்கு முன் மனோமயமாகத் திகழ்வது, மெய்யறிவு பெற்ற பின் பிரம்மமயமாகத் திகழ்கிறது. (அதாவது இருப்பது ஒரு பொருளே. “இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர். உபாதியுணர்வு மட்டுமே வேறுபடுகிறது.”)
🔸 ‎ மனம், ஆத்மன், சீவன், சித்ஜடகிரந்தி என எல்லாம் ஒரு பொருட் பன்மொழிகளாகும்.

(2018ல் நான் எழுதிய ஓர் இடுகையிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன் 🙏🏽)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 👊🏽

வானவியலில் நம் முன்னோர்கள் முன்னோடிகள் என்பதற்கு சில சான்றுகள்:

💥 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், நம் தலைக்கு நேர் மேலே பகலவன் இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே ஆண்டு பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்!! 👏🏽👏🏽 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. (ஆகையால், சித்திரை முதல் நாளன்று புவியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை!)

இந்த நுட்பமான முறையினால் ஒவ்வொரு ஆண்டும் முழுதாக முடிவடையும். ஆனால், பரங்கி ஆண்டு முழுமையாக முடிவடைவதில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 நாளை சேர்க்கின்றனர். இதற்கும் பல விதிகள் உண்டு (4ஆல் வகுபட வேண்டும், 100ஆல் வகுபட்டாலும் 400ஆல் வகுபட வேண்டும், 400ஆல் வகுபட்டாலும் 4000ஆல் வகுபடக்கூடாது, …😲). இன்றைய நிலையில் மீண்டும் பரங்கி ஆண்டு சீராவது பொ.ஆ. 4000-த்தில்தான். (பரங்கி ஆண்டை “சொதப்பல் ஆண்டு” என்றழைப்பதற்கு இதை விட சிறந்த ஏது வேறென்ன வேண்டும்? 😛)

💥 நம் முன்னோர்களின் ஆண்டு கணக்கிற்கு, தன் தாவரக் குழந்தைகளை பூக்க விட்டு, இயற்கை அன்னையும் உடன்படுகின்றார்!! மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி, புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் ஆண்டு பிறப்பு காலத்தில் தான்.

💥 உலகிலுள்ள பெரும்பாலான ஆண்டு பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆண்டும் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், இஸ்ரவேல் மெய்யியலாளர் இயேசு பிறந்தது சனவரி 1 என்று ஒரு நம்பிக்கை இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் சனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ ஆண்டு பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து “முட்டாள்கள்” என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்! 😏).

💥 சித்திரை 1-ஐ ஆண்டின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். பகலவன் வருடை ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் கற்றுக் கொண்டனர் எனலாம்! ஆரியர்களின் உத்திராயண-தட்சிணாயன கணக்கும் நம்முடையது தான்!!

அவர்களது பிறப்பிடமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ரஷ்யா) பகலவன் காட்சி தருவதே ஆண்டிற்கு சில நாட்கள் தான். குகைகளையும், கூடாரங்களையும் விட்டு தகுந்த பாதுகாப்பின்றி வெளிவந்தால் இரத்தம் உறைந்துவிடும் நிலை. இதில் எங்கிருந்து அயண ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? மேலும், உத்திராயணமும் தட்சிணாயனமும் சரியாக 6 மாதங்களாகப் பிரிவது நிலநடுக்கோட்டுப் பகுதியில் தான் – நம் முன்னோர்கள் வாழ்ந்த தென்மதுரையில் தான்!! நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, தமது என்று முத்திரை குத்தி, மீண்டும் நம் தலையிலேயே கட்டிவிட்டார்கள் (கோல்கேட்காரன் கரியையும், உப்பையும் அன்று கிண்டல் செய்து விட்டு, இன்று அவற்றைக் கொண்டு பற்பசை தயாரித்து நம்மிடமே விற்பது போல).

💥 “இவ்வளவு தாென்மை, அறிவியல், வரலாறு இருந்தும் நம் மக்கள் ஏன் ஆங்கில புத்தாண்டன்று திருத்தலங்களுக்கு செல்கின்றனர்?” என்ற கேள்வி எழலாம். அன்று, சமூகத்தின் முக்கிய நபர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பகுதிக் கொள்ளைக் கூட்டத்தலைவனை (பரங்கிப் பிரபு) சந்தித்து பூ மாலை, பழம், இனிப்பு போன்ற பரிசுகளை அளித்து வாழ்த்துச் சொல்ல / பெற வேண்டும். தலைக்கனமும் திமிரும் பிடித்த இந்த நச்சுப் பாம்புகளிடமிருந்து தப்பிக்க எண்ணிய நம் பெரியோர்கள் கண்டுபிடித்த வழிதான்… சாெதப்பல் புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்வது. திரு வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி படித்திருவிழாவை தாெடங்கியதும் இப்படித்தான். கொள்ளைக் கூட்டத் தலைவியும் (இங்கிலாந்து ராணி) நம் சமய நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று ஆணையிட்டிருந்தாள். இதையும் பயன்படுத்தி பகுதி கொள்ளையர்களிடமிருந்து தப்பினர் நம் பெரியோர்கள்! 😎

“இன்றும் இவ்வழக்கம் தொடரவேண்டுமா?” என்று கேட்டால், உறுதியாகத் தொடரவேண்டும் என்பேன். பரங்கியரின் சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கருங்காலி / அறிவிலித் தமிழர்கள் இருக்கும்வரை இவ்வழக்கமும் தொடரவேண்டும்!! 👊🏽

oOOo

மேற்சொன்ன யாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் உயிரிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு – மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் பகலவனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன என்பதே அது. இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம்மோடு நெருங்கிய தொடர்பிலிருந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!!

oOOo

சொதப்பல் ஆண்டு பிறப்பு…

👊🏽 அறிவியல் & வானவியல் அடிப்படையற்றது
👊🏽 இயற்கை சுழற்சிக்கு மாறானது
👊🏽 சூழலுக்கு பொருந்தாத கொண்டாட்டங்களைக் கொண்டது
👊🏽 அடிமை மனப்பான்மையை வளர்ப்பது

சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடுவதை தவிர்ப்போம். நமது ஆண்டு பிறப்பைக் கொண்டாடி மகிழ்வோம். நமது தொன்மை, வரலாறு, அடையாளங்களைக் காப்போம். தமிழன் என்று பெருமை கொள்வோம். 👍🏽

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே”

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮